இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட யக்கல, வெலிவேரிய, கனேமுல்ல,வீரகுல, மீரிகம, கிரிந்திவெல, தொம்ப்பே, மல்வத்துஹிரிபிட்டிய, கல்லேவல, பூகொட, நிட்டம்புவ உள்ளிட்ட 16 பகுதிகளில் மீண்டும் ஊர்டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும், நோயாளிகளை அடையாளம் காணும் பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள், தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அருகில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த உத்தரவுகளை அதிபர் கோட்டபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தின் போது, கொரோனா தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
உலகின் ஏனைய நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக ஊடகங்களினால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகள் குறைந்து விட்டது எனவும், கொரோனா நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் அப்போது அதிபர் கோட்டபய ராஜபக்சே வேதனை தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்காகவும் உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் அப்போது கலந்துரையாடப்பட்டது.


No comments:
Post a Comment