மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய "இலங்கேஸ்வரன் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வும் சிறுவர் மகிழ்வு கொண்டாட்டமும்."
மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய இலங்கேஸ்வரன் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வும் சிறுவர் மகிழ்வு கொண்டாட்டமும் சனிக்கிழமை (03) மாலை ஆரையம்பதியில் இடம் பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
“இசையால் வசமாகா இதயமெது - மீண்டும் இசையோடு பயணிப்போம் எனும் தொனிப்பொருளில்” இடம் பெற்ற இந்நிகழ்விற்கு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மோகனதாசன், ஆரையம்பதி தபால் நிலைய தபால் அதிபர் திருமதி.வை.லோகேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலைவளர்த்த ஆரையம்பதி மண்ணிலே நீண்டகாலத்திற்கு பின்பு இலங்கேஸ்வரன் இசைக்குழுவின் மூத்த மற்றும் இளம் கலைஞர்களின் ஒருங்கிணைப்புடனான இசைநிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேசத்தின் புகழை நிலைக்க செய்கின்ற மூத்த மற்றும இளம் கலைஞர்கள் தங்களது ஒற்றுமையான ஒருங்கிணைப்புடன் இசைத்துறைசார்ந்த பல்துறை ஆற்றலை வெளிப்படுத்தும்வகையிலான சிறந்ததொரு களமாகவும் இந்த இசை மேடை அமைந்திருந்தது.
கலைஞர்களின் உள நலனை மேலாங்க செய்து கலைஞர்களின் மன அழுத்தத்தை அரங்காற்றுகைகளூடாக குறைக்கின்ற வகையிலான மிகச்சிறந்ததொரு கலைகளமாக இந்நிகழ்வு ஆரையம்பதி மண்ணிலே நடைபெற்றது.
ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு காளி அம்மன் ஆலய நிருவாக சபையினர் மற்றும் சக்தி விளையாட்டு கழகத்தினர் இணைந்து இந்த வரலாற்று இசை நிகழ்விற்கான ஒத்துளைப்புக்களை மேற்கொண்டிருந்ததுடன், இளம் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்ததுடன், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சிறுவர்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.







No comments:
Post a Comment